Sunday, May 26, 2013

டி.எம்.எஸ் என்ற இமயம்!




டி.எம்.எஸ் மறைந்துவிட்டார். ‘பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’ என்று கணீரென்ற குரலில் பாடிக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான குரல் காலதேவனின் கணக்கு முடிந்துபோனவுடன் தன்னுடைய உலக இருப்பை முடித்துக்கொண்டு பயணம் புறப்பட்டுவிட்டது. அவர் அதற்கு முன்னாலேயே பின்னணி பாடிவிட்டார். ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ என்று பாடியதுதான் அவருடைய முதல் பாடல் என்றெல்லாம் கணக்கு சொல்லப்பட்டாலும் அவர் மக்களிடம் அறிமுகமானதும் திரை ரசிகனின் வியப்புக்களுக்கு ஆளானதும் இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், ஒரு நான்கைந்து தலைமுறை ரசிகர்களின் முதன்மையான குரலாக விளங்கப்போவதற்கான அங்கீகாரம் பெற்றதுவும் நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி படத்தின் மூலம்தான்.

சென்ற வருடத்தில் நானும் கவிஞர் அறிவுமதியும் திண்டுக்கல் மலைப்பிரதேசங்களில் ஊடுருவிச்செல்லும் கோடைக்கானல் மலைப்பகுதிகளின் பின்புறமிருந்த மலைத்தோட்டங்களின் ஊடாக நிறைய கிராமங்களுக்குச் சென்றிருந்தோம். அழகும் இயற்கையும் பின்னிப்பிணைந்து நாகரிகத்தின் வெளிப்பூச்சுக்களும் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் அவ்வளவாய் குடிபுகாமல் இன்னமும் பளிங்கு போன்ற பரிசுத்தத்துடனேயே மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துசெல்லும் பகுதிகள் அவை. ஆடலூர், பன்றியூர், பித்தளைப்பட்டி என்றெல்லாம் நீண்ட பயணங்கள் முடித்துக்கொண்டு திண்டுக்கல்லுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அறிவுமதி கேட்டார். 

“அமுதவன் ஒண்ணு கவனிச்சீங்களா? காலையிலிருந்து நாம எத்தனையோ மலைக்கிராமங்களுக்குப் போனோமே எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு ஒலிபெருக்கியில் ஏதோ ஒரு பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே எம்ஜிஆர் சிவாஜி காலத்துப் பாடல். எல்லாமே டிஎம்எஸ் சுசீலா பாடல். எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி, விஸ்வநாதன் காலத்துப் பாடல். இன்னும் இதையெல்லாம் விட்டே இவங்க வரவில்லையே. இவங்க எப்போ இளையராஜா காலத்துக்கு வந்து எப்போ ரகுமான் ஹாரிஸ் காலத்துக்கெல்லாம் வரப்போறாங்க தெரியலையே. இவங்க இன்னும் கண்ணதாசனில்தான் இருக்காங்க. எப்போ வைரமுத்து காலத்துக்கு வந்து எப்போ அறிவுமதியையும் நா.முத்துக்குமாரையும் கேட்கப்போறாங்க?” அவர் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்கூட டிஎம்எஸ் ‘உள்ளம் என்பது ஆமை’ பாடிக்கொண்டிருந்தார்.

இதனை  ஒரு குறையாகவோ ஆதங்கமாகவோ ஆற்றாமையிலோ அறிவுமதி சொல்லவில்லை. அந்தக் காலத்துப் பாடல்களுக்கிருந்த வலிமை…அவை உருவான விதம், காலத்தைக் கடந்து நிற்கும் அவற்றின் தொன்மை….. இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், அந்தப் படத்தின் கதை, அந்தப் பாடலுக்கு நடித்த நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் என்று இத்தனைப்பேரின் கூட்டுமுயற்சியும் ஒரே புள்ளியில் இணைந்த அற்புதங்கள் அவை. இன்றைய பாடல்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் முடமாக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரு இடம் பழுது பட்டிருக்கும். ஏதோ ஒரு புள்ளி குறைந்திருக்கும். எங்கோ ஒரு கண்ணி விடுபட்டிருக்கும். இந்தக் காரணங்களால்தான் இன்றைய பாடல்களின் வாழ்நாள் அற்பமாகப் போய்விடுகிறது. பிறக்கும்போதே பல்வேறு குறைகளுடன், அற்ப ஆயுளுடன்தான் பல பாடல்கள் இங்கே பிரசவிக்கப்படுகின்றன.

சாஸ்திர ரீதியான சம்பிரதாயமான பாடல்கள் இடம்பெற்ற பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் காலத்திலிருந்து திரையிசை மக்கள் இசையாக மாற ஆரம்பித்த காலகட்டத்தில் திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், கண்டசாலா என்றிருந்த வரிசையில் டிஎம்எஸ் வருகிறார். சிவாஜி எம்ஜிஆர் என்ற இரு பெரும் இமயங்களின் ஆட்சிதான் அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு என்ற விதி ஏற்படுத்தப்பட்டவுடன் இருவரின் குரலாகவும் அவதாரம் எடுக்கிறார் டிஎம்எஸ்.  இவருக்கு முன் யார் யாரோ சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் பின்னணி பாடியிருந்தபோதிலும் “அட, இவருக்காகத்தானே தமிழ்த்திரையுலகம் காத்திருந்தது” என்பதைப்போல் வாரி அணைத்துக்கொண்டது இவரை. இவருடைய ஆட்சிக்காலம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை இவருக்கு இணையான- முழுமையான- இன்னொரு ஆண் பாடகர் தமிழில் வரவில்லை. வரவில்லை. வரப்போவதுமில்லை.

முகமது ரஃபியைப் பார்த்துத்தான் தமது பாடும் பாணியை இவர் வடிவமைத்துக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. ‘பாகவதரின் பாடும் பாணிதான் ஆரம்பத்தில் என்னுடையது’ என்று இவரே சொல்லியிருப்பதும் உண்டு. இங்கிருந்து கொஞ்சம் அங்கிருந்து கொஞ்சம் என்பதாக சிறந்த விஷயங்களை சில இடங்களிலிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் பிற்பாடு அதே முகமதுரஃபி பின்னாளில் இவரைப் பார்த்து வியந்திருக்கிறார். இவரது சில பாடல்கள் இந்தியில் படமாக்கப்பட்டபோது அவற்றைப் பாட நேர்ந்த சமயங்களில் “அடேயப்பா இந்த மாதிரி பாட என்னால் முடியாது. இந்த ஆலாபனையெல்லாம் பாடினால் நான் செத்தே போய்விடுவேன்” என்று முகமது ரஃபி சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

தூக்குத்தூக்கி படத்திற்காக டிஎம்எஸ்ஸை அழைத்துப் பாடவைக்க முயன்றபோது மிக அதிகமான கோபத்துடன் அதனை எதிர்த்தவர் சிவாஜி கணேசன். “எதுக்கு? சிதம்பரம் ஜெயராமன் குரல் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு….எதுக்காக இப்ப புது ஆளைக் கொண்டுவந்து போட்டு குழப்பம் பண்றீங்க? அதெல்லாம் வேண்டாம். சிதம்பரம் ஜெயராமனே பாடட்டும்” என்றிருக்கிறார்.
 “இல்லை இந்தப் பாடல் பாடியிருக்கார். கேட்டுப்பாருங்க. திருப்தியில்லைன்னா நீங்க சொன்னபடியே செய்துறலாம்” என்று சொல்லி டிஎம்எஸ் சிவாஜிக்காகப் பாடிய பாடலைப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார். கேட்டவர் வியந்துபோய் “யார் இவர்? என்னுடைய குரலிலியே பாடின மாதிரி இருக்கு….எல்லாப்பாட்டுமே இவரை வச்சே ரிகார்ட் பண்ணிருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

பின்னர் லதா மங்கேஷ்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “என்னுடைய குரலுக்கு பின்னணிப் பாட டிஎம்எஸ் கிடைச்சது எனக்குக் கிடைச்ச வரம்” என்றிருக்கிறார்.

அன்றைய தினத்திலிருந்து No looking back…..சிவாஜி என்றால் டிஎம்எஸ்தான் என்றுதான் போய்க்கொண்டிருந்தது. எம்ஜிஆருக்கும் இவர்தான் என்றபோதும் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் “டிஎம்எஸ் வேண்டாம், புதிய பாடகரை உருவாக்குங்க” என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டார். எம்ஜிஆரைப் பற்றி டிஎம்எஸ் இலங்கை வானொலியில் அளித்த பேட்டியின் விளைவு அது என்று சொல்லப்படுகிறது.

எம்ஜிஆர் குணம் அதுதான்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்று விட்டதாலும், மக்கள் மத்தியில் ஈடு இணையற்ற பெரியதொரு பிம்பம் அவருக்கு ஏற்பட்டுவிட்டதாலும் அவருடைய இம்மாதிரியான குணங்கள் யாவும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. பல உண்மைகளை மக்கள் மத்தியில் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதில்லை. தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.

இலங்கை வானொலிப் பேட்டியில் அவர் சிவாஜியைப் பற்றியும் அதனைத்தான் சொன்னார். அந்தப் பேட்டி மட்டுமல்ல வெளியூர்களுக்குச் சென்று நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளிலும் அப்படித்தான் பேசுவார் டிஎம்எஸ். “எம்ஜிஆரையும் சிவாஜியையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பவன் இந்த டிஎம்எஸ்தான். இந்த டிஎம்எஸ்ஸின் குரலால்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் முகவரியே என்னுடைய குரல்தான்.” என்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று “எம்ஜிஆரும் சிவாஜியும் என்னால்தான் புகழ் பெற்றார்கள்” என்பார்.  இந்தத் தொனியில்தான் பேசுவார். அவருக்கு வாய் நீளம் அதிகம்தான். தம்மைப்பற்றி மிக அதிகமாக அவரே பேசிக்கொள்வார் என்பதுதான் அவரிடமிருந்த ஒரே குறை. அவர் பேச்சில் எப்போதுமே இம்மாதிரியான செருக்கு தென்படும். என்னுடைய நண்பர் சொல்லுவார் “அவர் பேசுவதைக் கேட்கக்கூடாது. பாடுவதை மட்டும் கேட்கவேண்டும்”
   
இப்படிப்பட்ட பேச்சுக்கள் சிவாஜியை அசைத்துப் பார்ப்பதில்லை. 

அவர் என்றைக்கோ அதனையெல்லாம் கடந்துவிட்டிருந்தார். சில சம்பவங்கள் சொல்லுவார்கள். சிவாஜி அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர் அசோகனும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர்கள். இவர்கள் அவ்வப்போது நிறைய கூட்டங்களில் பேசுவார்கள். எல்லாக் கூட்டங்களிலும் சகட்டுமேனிக்கு சிவாஜியைப் போட்டுத் தாக்குவார்கள். அவரை நாராச நடையில் கிழிகிழியென்று கிழிப்பார்கள். மறுநாள் காலையில் படப்பிடிப்புக்கு வந்து சிவாஜியின் படத்தில் அவருடன் நடிப்பார்கள். ஒருமுறை அப்படித்தான். இவர்களில் யாரோ ஒருவர் மிகவும் தரம்தாழ்ந்து சிவாஜியைப் பற்றிப் பேசிய பேச்சு அன்றைய தினசரியில் வந்துவிட்டது. நிச்சயம் இந்தப் பேச்சைப் பார்த்தால் சிவாஜி கொதித்தெழுவார் படத்திலிருந்தே அவரைத் தூக்கிவிடுவார். எப்படியும் ரீ ஷூட்தான் செய்யவேண்டியிருக்கும், என்ற பதட்டத்துடன் இருந்திருக்கிறார்கள். சிவாஜி வந்தவுடன்

கையைப் பிசைந்துகொண்டே “அவரை வேண்டுமானால் நீக்கிவிடலாம். வேண்டுமானால் ரீ ஷூட் பண்ணிக்கலாம்” என்றிருக்கின்றனர். 

“ஏம்ப்பா என்ன ஆச்சு?” என்றாராம் சிவாஜி.

“இல்லை உங்களைப் பற்றி இப்படிப் பேசி அது பத்திரிகையிலும் வந்திருக்கு”

மவுனமாக அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்த சிவாஜி ஒரு சின்னப் புன்முறுவலுடன் “அவன் நம்மளைப் பத்தி இப்படிப் பேசியிருக்கான்னா அரசியல்ல அவனுடைய வயித்துப் பொழைப்பு நடக்கணும்ன்றதுக்காகப் பேசியிருக்கான். நம்மைப் பத்தி இப்படிப் பேசிப் பொழைக்கிறான்னா பொழைச்சிட்டுப் போறான். அதுக்காக அவனுடைய மெயின் வருமானத்துல எதுக்குக் கையை வைக்கணும்? அவன் வயித்துல எதுக்கு அடிக்கணும்? அவனே இருந்துட்டுப் போறான் விட்ருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

எம்ஜிஆரிடம் இதெல்லாம் நடக்காது. அவரைப் பற்றிச் சின்னதாக கமெண்ட் அடித்தவன்கூட அதற்கான விலையைக் கொடுத்தாகவேண்டும். அவர் படத்திலிருந்து நீக்குவது என்பது மட்டுமல்ல; திரைப்படத்துறையிலிருந்தே காலிசெய்துவிட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பார்.

கண்ணதாசனுக்கும் அவருக்குமான கருத்துவேறுபாடுகள் வந்தபோது கண்ணதாசனை ஒழித்துக்கட்ட அவர் செய்த வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசிவரையில் அவரால் அது முடியாமலேயே போய்விட்டது. கண்ணதாசன் இல்லாமல்தான் எம்ஜிஆரின் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இவர்கள் கருத்துவேறுபாட்டினால் முழுமையாக லாபம் பார்த்தவர் வாலிதான்.

எம்ஜிஆரின் அரசியல், திரைப்படம், மற்றும் பொதுவாழ்க்கையில் அவர் முழுமையாகத் தோல்வியடைந்தது ‘கண்ணதாசனை ஒழித்துக்கட்டும்’ விஷயத்தில் மட்டும்தான். கடைசியில் அவரை “வேறுவழியாக சமாதானப்படுத்தி’ தம்முடன் சேர்த்துக்கொள்ளும் விதமாகத்தான் அவரைத் தேடிச்சென்று அவருக்கு அரசவைக்கவிஞர் பதவி வழங்கி சமாதான உடன்படிக்கை போடப்பட்டது.
இதே கண்ணதாசனுடன் சிவாஜிக்கும் பலமுறை கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் மட்டும் ஒருசில படங்களுக்கு கண்ணதாசன் வேண்டாம் என்றிருந்தார் சிவாஜி. 
ஒருமுறை சமாதானம் ஆனபிறகு அவ்வளவுதான். ‘கவிஞர்தான், கண்ணதாசன்தான், செட்டியார்தான்’! “எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பது நிசம்தான். ஆனா அது வேறு; தொழில் வேறு. இந்தத் தொழில்ல அவருக்கு இணையா இங்கே யாருமே கிடையாது. நான் பேசலைன்னா என்ன? என்னுடைய படத்துக்குக் கவிஞர்தான் பாட்டு எழுதணும். வேறு ஏதேதோ காரணங்களால் அவர் இல்லைன்னாலோ கிடைக்கலைன்னாலோ வேணும்னா நீங்க வேற யாரையாவது வெச்சு பாட்டு எழுதிக்கங்க” என்பார் சிவாஜி.


சிவாஜி எம்ஜிஆர் பற்றிய இந்த மனப்பான்மை டிஎம்எஸ் பற்றிப் பேசுவதற்கும் இன்றியமையாததாய் இருக்கிறது. ஏனெனில் சிவாஜிக்குக் கடைசிவரை டிஎம்எஸ்தான். 

டிஎம்எஸ்ஸூக்கு பதிலாக ஒரு மாற்றைக் கொண்டுவருவது என்பதில் திரைப்படத்துறையும் ஒரு கட்டத்தில் எம்எஸ்வியும்கூட உறுதியாய் இருக்கிறார்கள். எம்ஜிஆர் இனி டிஎம்எஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சிவாஜியை நாம் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று முதன்முதலாக வேறொருவரைப் பாடவைத்து ஒரு பாடலைப் பதிவுசெய்து விட்டார்கள்.

சிவாஜியிடம் பாடல் போட்டுக் காட்டப்படுகிறது.

பாடலைக் கேட்ட சிவாஜி முகம் சிவக்கிறார். “யாரைக்கேட்டு இப்படிச் செய்தீங்க?” என்கிறார். டிஎம்எஸ் ஏன் இல்லை என்பதற்கான காரணங்கள் வண்டிவண்டியாக அவரிடம் சொல்லப்படுகின்றன. ‘இனிமேல் இப்படித்தான் இவர்தான்…அல்லது வேறு புதுப்புதுப் பாடகர்கள்தாம்’ என்று அவரிடம் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் சமாதானமடைவதில்லை. “என்னமோ பண்ணிகிட்டு நாசமாப்போங்க. ஆனா நான் முடிவெடுத்தது எடுத்ததுதான். அடுத்த பாடலுக்கு எப்படின்றதை அப்புறமாப் பார்த்துக்கலாம். இந்தப் பாட்டுக்கு டிஎம்எஸ் இல்லாத குரலுக்கு நான் வாயசைக்கப்போவதில்லை. அந்தப் பாடல் அதுபாட்டுக்கு ஒலிக்கட்டும். நான் நடித்துக்கொடுக்கிறேன். வாயசைக்கமாட்டேன். அப்படியே எடுத்துக்கங்க” என்று தீர்மானமாய்ச் சொல்லிவிடுகிறார். கடைசியில், பாடலின் குரலுக்கு வாயசைக்காமலேயே புதிய பாடகரின் குரல் படமாக்கப்படுகிறது. அந்த அளவுக்கு டிஎம்எஸ்ஸின் குரலை நேசித்தவர் சிவாஜி.

ஒரு சிலரை இங்கே மிகவும் உயர்த்திச் சொல்வதால் மற்ற கலைஞர்களின் ரசிகர்கள் கோபித்துக்கொள்ள நேரலாம். அது இங்கே முக்கியமில்லை. சில உண்மைகள் சொல்லுவாரின்றி தனியே அனாதையாய்க் கிடக்கின்றன. சிலவற்றைச் சொல்லுவதற்கு ஆட்கள் இருப்பதில்லை.
அதானாலேயே அவரவர்களுக்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்ததுதான் முழுமுதல் உண்மையானது என்று தவறாக நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். இணையத்தில் அவர்களுக்கு என்னென்ன படிக்கக்கிடைக்கிறதோ அவை மட்டும்தான் உண்மை என்றே நினைக்கிறார்கள். இணையத்தின் பதிவுகளுக்கு வராமல் இன்னமும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன என்பது பாவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இவர்களுடைய வட்டத்துக்கு உட்பட்ட விஷயங்களை வைத்துக்கொண்டுதான் இவர்களுக்குள் அபிப்பிராயங்கள் உருவாகின்றன. பரிதாபம் என்னவென்றால் இவர்களுடைய ‘வட்டங்கள்’ மிகமிகச் சிறியவையாக இருக்கின்றன.

திரைப்படத்தில் சிறந்த நடனம் என்றால் இவர்களுக்கு அனுஷ்காவையும் அசினையும்தான் தெரிந்திருக்கிறது. பத்மினியையும் வைஜயந்திமாலாவையும் தெரியுமா என்று கேட்டால் கோபம் வருகிறது.

இயக்குநர் என்றால் இவர்களுக்குத் தெரிந்தது மணிரத்தினத்திலிருந்துதான். ஸ்ரீதரையும் பீம்சிங்கையும் கேபியையும் தெரியவில்லை என்பதை இவர்கள் ஒரு இழப்பாகவே கருதுவதில்லை.
ஒளிப்பதிவாளர் என்றால் இவர்கள் அறிந்தது பிசிஸ்ரீராம்தான். அங்கிருந்துதான் கணக்கைத் துவக்குகிறார்கள். வின்சென்டையும், மார்கஸ் பார்ட்லேயையும் மஸ்தானையும் கர்ணனையும் இவர்களுக்குத் தெரிவதில்லை.

இசை என்றால் இளையராஜாவிலிருந்துதான் கணக்கு ஆரம்பிக்கிறது (வேடிக்கை என்னவென்றால் இந்தக் கணக்கு மட்டும் அத்துடனேயே நின்றும் விடுகிறது). ஜி.ராமனாதனையோ, சிஆர்சுப்பராமனையோ,எஸ்எம்சுப்பையா நாயுடுவையோ, விஸ்வநாதன் ராமமூர்த்தியையோ, கேவிமகாதேவனையோ இவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

அதே போல பின்னணிப் பாடகர் என்றால் ‘இவர்களைப்’ பொறுத்தவரை வெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மட்டும்தான். பாடகி என்றால் எஸ்.ஜானகி மட்டும்தான். நடிகர் என்றால் கமலஹாசன் மட்டும்தான்.

இந்தச் ‘சின்ன வட்டக்காரர்கள்’ மொத்த மக்கள் தொகையில் ஒரு பத்து சதவிகிதம் கூட இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் சொல்வதுமட்டும் ஏன் அல்லது எப்படி பிரதானமாகத் தெரிகிறது என்றால் இந்தச் சின்ன வட்டத்தின் கையில்தான் இணையங்கள் இருக்கின்றன. இன்றைய பத்திரிகைகளும் இவர்களுடைய வட்டத்திலிருந்துதான் வெளிவருகின்றன. நல்ல வேளையாக விகடன் குமுதம் கல்கி போன்ற பத்திரிகைகள் இன்னமும் பெரும்பாலான வாசகர்களைக் கொண்டவையாக இருப்பதாலும் சில தொலைக்காட்சிகளில் விஷயம் தெரிந்தவர்கள் இருப்பதாலும் ‘கருத்துப் பேரழிவு’ பெருமளவில் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

சரி விஷயத்துக்கு வருவோம்.

தமிழில் எத்தனைப் பாடகர்கள் வந்தாலும் சரி அவர்களால் டிஎம்எஸ்ஸூக்கு மாற்றாக ஒருநாளும் வரமுடியாது. இளையராஜா சொல்லியிருப்பதுபோல் ‘தமிழின் ஒரே ஆண்குரலுக்குச் சொந்தக்காரர்’ அவர்தான். அவருக்குப்பின் ஏ.எம்.ராஜாவின்- பிபிஎஸ்ஸின் குரலுக்கு மாற்றானவர்களாகத்தான் கேஜேஏசுதாஸூம் எஸ்பிபியும் அவர்களைத் தொடர்ந்து ஹரிஹரன், கார்த்திக் போன்றவர்களும் வந்தனரே அன்றி டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருவரும் இல்லை. ஒரு ஓரத்தில் மலேசியா வாசுதேவனும், இன்னொரு புறத்தில் சங்கர் மகாதேவனும்  சிறிது தூரம் ஓடிவந்தனர். பெரிய சாதனைகள் என்பதுபோல் இவர்களிடம் சொல்ல எதுவுமில்லை.

தொல்காப்பியன் காலம் தொடங்கி வள்ளுவன் சங்க காலம் என்று இந்த நாள்வரைக்கும் சீரிளமைக்குன்றாத தமிழ் என்றெல்லாம் பேசுகிறோம். அந்தத் தமிழை சரியாக எழுதவும் பேசவும், சரியாக உச்சரிக்கவும் நாதியற்றுப் போய் இருக்கிறோம். எட்டுக்கோடித் தமிழரில் தமிழைச் சரியாக உச்சரிக்க பிரபலமானவர்களில் மொத்தமே ஒரு நூறுபேர் இருந்தார்களென்றாலேயே அதிகம்.

கவனம் வைத்துக்கொள்ளுங்கள் திரைபடத்துறையில் தமிழைச் சரியாக உச்சரித்தவர்கள்; வசனத்தில் சிவாஜிகணேசன், பாடலில் டிஎம்சௌந்தரராஜன். இரண்டுபேர் மட்டுமே!
 
உடனே எஸ்எஸ்ஆர் உச்சரிக்கவில்லையா, பாடல்களில் சீர்காழி சரியாக உச்சரிக்கவில்லையா என்றெல்லாம் கேட்டு சண்டைக்குக் கிளம்பவேண்டாம். இவர்களுடைய உச்சரிப்பிலெல்லாம் தவறு கண்டுபிடிக்கமுடியாது


அவ்வளவுதான். தவறுகள் இல்லை என்பது மட்டுமல்ல, தரம் என்பதும், தரசுத்தம் எவ்வளவு என்பதும்கூட இங்கே முக்கியம். அதனால் உச்சரிப்பு என்பது எப்படி இருக்கவேண்டும், எதுமாதிரி இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் சான்று வேண்டும், சாட்சி பகரவேண்டும் பாடம் நடத்தவேண்டும் பெருமைப் படவேண்டும் என்றெல்லாம் பார்த்தால்-
சிவாஜிதான், டிஎம்எஸ்தான். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!

சிவாஜி அளவுக்கும் டிஎம்எஸ் அளவுக்கும் உச்சரிப்புடன் கூடவே பாவமும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் நடிகரும் சரி, பாடகரும் சரி இன்னமும் யாரும் வரவில்லை. வரப்போவதுமில்லை.

சிவாஜியையும் இன்னும் சிலரையும் இங்கே திரும்பத் திரும்ப பேசுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இவர்களுக்குப் பின்னர் வந்த பலபேரை இதே அளவுக்கு உயர்த்திச் சொல்லுவதில்லையே என்பது ஒரு சிலரின் ஆதங்கமாகவும் இருக்கிறது. எழுபதுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அத்தனைக் கலைஞர்களுமே சுயமாக வந்தவர்கள். அவர்கள் அத்தனைப்பேருமே மூலத்தை எடுத்துக்கொண்டு தொழில் புரிந்தவர்கள். மூலத்திலிருந்து பிரிந்துவரும் இழைகளைக் கொண்டுதான் அவர்கள் தங்கள் கலையம்சங்களை வெளிப்படுத்தினார்கள். எழுபதுக்குப் பிறகு காலம் மாறிவிட்டது. விஞ்ஞானத்துடன் கூடிய மாபெரும் தொழில் புரட்சி திரைபடத்துறையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

ஆயிரக்கணக்கான ‘மாதிரிகள்’ ஒவ்வொன்றிலும் இங்கே வந்து குவிய ஆரம்பித்துவிட்டன. ஆயிரக்கணக்கான ஆடல்கள், பாடல்கள், நடனங்கள், காட்சி அமைப்புக்கள், சண்டைக்காட்சிகள் எல்லாமே கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இசைத்துறையை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் குறிப்பிட்ட ஆங்கிலப் படங்கள், குறிப்பிட்ட ஆங்கிலப் பாடல்கள் என்று மட்டுமே வந்துகொண்டிருந்த நிலைமை மாறி எப்போது டேப் ரிகார்டர் நுழைந்ததோ லட்சக்கணக்கான பாடல்கள் இசைத்துறையை நிரப்ப ஆரம்பித்தன. யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டு  வருடத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ மட்டுமே பாடல்களிலும் இசைக்கோர்ப்புகளிலும் மாறுதல்கள் செய்துகொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கு அடித்தது யோகம். காலையில் ஒரு காசெட், மாலையில் ஒரு காசெட் என்று வந்து புதிது புதிதாய் ‘இசை அமைக்க’ யோசனை தந்தது. புதிய புதிய வாத்தியங்கள் சிங்கப்பூர் மார்க்கெட்டிலேயே கடை விரிக்கப்பட்டன. இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர் சிலர். அந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு எல்லாமே புதிது. இவரல்லவோ நம் ஆதர்சம், இவரல்லவோ நம் மீட்பர் என்று கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

சிவாஜியை எடுத்துக்கொண்டால் அந்தக் கலைஞன் புதிது புதிதாய் யோசித்து குறைந்த பட்சம் ஒரு அறுபது எழுபது பாத்திரங்களையாவது புதிதாகச் செய்திருப்பார். வ.உ.சியாக நடிக்க அவருக்கு அதற்கு முன்பு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’ எந்தப் படமும் கிடையாது. கட்டபொம்மனாக நடிக்க ‘மாதிரி பார்க்க’ படம் கிடையாது. சிவபெருமானும் தருமியும் பேசிக்கொள்ளும் காட்சியை எந்தப் படத்தைப் பார்த்து நடித்திருப்பார்? பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார் வசனங்கள் பேச எந்தப் படம் பார்த்துக் கற்றுக்கொண்டிருப்பார்? கணவனாக, அண்ணனாக, தம்பியாக, வேலைக்காரனாக, மேனேஜராக, நண்பனாக இன்னும் என்னென்னவோ வேடங்கள் முதன்முதலாக அவர் செய்துவைத்துவிட்டுப் போனவையாக இருக்கின்றன. இவை அத்தனையும் இயக்குநர், கதாசிரியர், நடிகர் என்ற கூட்டு முயற்சியில் வெளிப்பட்ட  கலைவடிவங்கள் என்பதை மறந்துவிடக்கூடாது..

ஆனால் இவருக்குப் பின் வந்தவர்களுடைய படங்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு ‘மாதிரி பார்த்துக்கொள்ள’ (reference-க்கு)சிவாஜியின் படங்களேகூட வேண்டிய அளவு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சிடிக்கள் கிடைக்கின்றன.. அதைப் பார்த்து பண்ணவேண்டியதுதான். அல்லது அவற்றைப் பார்த்துவிட்டு அதிலிருந்து எந்தெந்த வகையில் மாறுதல் செய்துகொள்ளலாம் என்று பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

அதிலும் சிவாஜி காலத்திலெல்லாம் ஒரு காட்சி நன்றாக வந்திருக்கிறதா அதனை அப்படியே விட்டுவிடலாமா இல்லை மாற்றிச் செய்யலாமா என்றெல்லாம் சரிபார்த்துக்கொண்டு செய்வதற்கான வசதியெல்லாம் இருக்கவில்லை. மூவியாலாவில் போட்டுப் பார்த்தபிறகுதான் தெரியவரும். இப்போது அப்படியல்ல. ஒரு காட்சி எடுத்தவுடன் அப்போதே ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டியது. சரியாக வரவில்லையா திருப்பி எடுக்கவேண்டியது. இம்மாதிரி எத்தனைதடவை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப எடுத்துக்கொண்டே இருக்கலாம். அதனால் இன்றைய நடிகர்களை சிவாஜியோடெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பதே அயோக்கியத்தனம்.
ஒன்றை நினைத்துப் பாருங்கள்.

ஒரு சாதாரண தோசையோ இட்லியோ வீட்டில் செய்யவேண்டுமென்றால்கூட அரிசியைப் புடைத்து, கல்பொறுக்கி, களைந்து, ஊறவைத்து, மாவாட்டி இரவு பூராவும் புளிக்கவைத்து காலை எழுந்து தோசையோ இட்லியோ செய்து கொடுத்தவர்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் யோசித்துப் பாருங்கள். தற்சமயம் இன்ஸ்டண்ட் மாவு கிடைக்கிறதே அதை அப்படியே தோசைக்கல்லில் ஊற்றி எடுப்பவரையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். அன்றைய கலைஞர்களின் உழைப்பும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் நிச்சயம் புரியும்.

டிஎம்எஸ் குரலிலுள்ள அருமை பெருமைகளை இங்கே விவரித்துச் சொல்லிக் கொண்டிருப்பது வீண்வேலை. இவரது குரலைக் கேட்டவுடன் எம்ஜிஆரையும் சிவாஜியையும் நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதக்கலையை அவர் மட்டுமே செய்தார் இல்லையா? அதுவே போதும். இனி எந்தவொரு பாடகரும் யாருக்கும் இதனைச் செய்யப்போவதுமில்லை. செய்யவும் முடியாது.

எந்தக் கலைஞனாயிருந்தாலும் புகழ் சரிவு ஏற்படவில்லையெனினும் ஆடிக்கொண்டிருக்கும் அரங்கத்தைவிட்டு இறங்கவேண்டிய தருணம் வந்தே தீரும்.

அது இந்த மகா கலைஞனுக்கும் வந்தது. நிறையப்பேர் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் டிஎம்எஸ் ஒதுக்கப்பட்டார் என்று சொல்லுவது தவறு.
அதற்கு முன்னாலேயே எம்எஸ்வி காலத்திலேயே அவரது சரிவு ஆரம்பமாகிவிட்டது. 

எம்எஸ்விக்கும் டிஎம்எஸ்ஸூக்கும் என்ன மனத்தாங்கலோ தெரியவில்லை. எம்எஸ்வியே இவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பித்தார். பி.சுசீலா இவருடன் டூயட் பாடுவதை விரும்பவில்லை, இவருடன் சேர்ந்து பாட மறுக்கிறார் என்று கூடச் சொல்லப்பட்டது. அதற்காகவே எஸ்பிபிக்கும் யேசுதாஸூக்குமான வாய்ப்புகள் அதிகமாயின. இதற்கெல்லாம் காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆன்மிக பக்தரான டிஎம்எஸ் இதற்கு வேறு காரணங்கள் சொல்ல ஆரம்பித்தார். “நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு ஒரு தலை ராகம் படத்தில் பாடியதுதான். ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று பாடினேன். அன்றுமுதல் என்னுடைய ராசி என்னைவிட்டு அகன்று போனது. அதாவது பரவாயில்லை. அதே படத்தில் ‘என் கதை முடியும் நேரமிது’ என்று நானே எனக்கு அறம் பாடிக்கொண்டேன். இந்தப் பாடல்தான் என்னுடைய திரை 
 வாழ்க்கையையே முடித்துவிட்டது” என்றார். அப்படியே  நம்பவும் செய்தார் அவர்.

பெங்களூரில் எழுபதுகளில் அப்போது இருந்த சுபாஷ்நகர் மைதானத்தில் நடந்த எக்ஸிபிஷனில் முதன்முதலாக அவருடைய இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது ஒரு ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டுபோய் ஆயிரக்கணக்கான மக்களிடையே நின்றபடியே அவருடைய கச்சேரியைக் கேட்டது நினைவிருக்கிறது. நான் ஆணையிட்டால் பாடலையும், உள்ளம் என்பது ஆமை பாடலையும் வழக்கம்போல் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் முகவரி நான்தான் என்பதுபோல் என்னென்னவோ சொல்லிவிட்டு அவர் பாடினார். ரேடியோவில் கேட்பதுபோல், அல்லது லவுட்ஸ்பீக்கரில் கேட்பதுபோல் இல்லையே என்ற எண்ணமும் ஏமாற்றமும்தான் அப்போது தோன்றியது.

அடுத்து லால்பாக்கில் நடைபெற்ற எம்எஸ்வியின் இசை நிகழ்ச்சியில் அவரை நேரில் பார்த்துப்பேசும் சந்தர்ப்பம் முதல்முறையாகக் கிடைத்தது. “நான் எங்க தம்பி பாடறேன்? என்னைப் பாட வைக்கிறதே அவன் முருகன்தானே” என்று மேலே கைகாட்டி ஜவ்வாது வாசனை மணக்கப்பேசினார் அவர்.

சிவகுமார் வீட்டுத் திருமணங்கள் அத்தனையிலும் நீண்ட நேரத்துக்கு வந்திருந்து செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தார் என்பதால் சூர்யா கார்த்தி அவர்களது தங்கை என மூன்று திருமணங்களிலுமே அவரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. கடைசியாய் கார்த்தி திருமண வரவேற்புக்கு வந்திருந்தவரிடம் பேசுவதற்குக் கை கொடுத்தபோது அவர் கைகளிலிருந்த நடுக்கமும் குச்சிக் குச்சியாய் இருந்த விரல்களின் மெலிவும் மனதை நீண்ட நாட்களுக்கு என்னவோ செய்துகொண்டே இருந்தன………………………

இதோ பாடல்களின் அரசன் புறப்பட்டுவிட்டான். 


ஆயிரக்கணக்கான திரைஇசைப் பாடல்களை மட்டுமல்ல என்றைக்குமே மறக்கமுடியாத சில முருகனின் பாடல்களையும் விட்டுவிட்டு! அந்த வசீகரமும் கம்பீரமும் கலந்த குரலில் ஒட்டப்பட்டுள்ள வெள்ளிச்சரிகையின் பளீரென்ற ஒளிமட்டும் என்றைக்குமே மங்கப்போவதில்லை.

Thursday, May 9, 2013

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் – பிஜேபி தோற்றது ஏன்?

                                                                            

 கர்நாடகத் தேர்தல் முடிவுகள் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. ‘மோடி பிரச்சாரத்துக்கு வந்தும் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லையே’ என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்துச்சொல்ல ‘ராகுல் வந்தும் வெற்றிபெற்றிருக்கிறார்களே என்பதுதான் என்னுடைய ஆச்சரியம்’ என்று இல.கணேசன் பளீரென்று திருப்பியடித்ததை ரசிக்கமுடிந்தது.
                                                   
தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு மாநிலத்தை பாரதிய ஜனதா  பிடித்திருந்தது அதனையும் இப்போது இழந்துவிட்டதே என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. பாரதிய ஜனதா இரண்டாவது இடத்திற்குக்கூட வரவில்லை. மூன்றாவது இடமா இரண்டாவது இடமா என்று தீர்மானிக்கமுடியாமல் ஐக்கிய ஜனதா தளத்துடனான சமமான இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இதற்கும் கீழே இருக்கவேண்டியதுதான் 

கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவின் நிலைமை. கட்சிப் பாகுபாடுகளின்படி அரசியல் சிந்தனை ஓட்டம் பரவியிருக்கும் யதார்த்த நிலைமை இதுதான். அப்படியானால் போனமுறை பாரதிய ஜனதா எப்படி ஆட்சியைப் பிடித்தது?

இதுதான் அலசி ஆராயப்படவேண்டிய கேள்வி.

இப்போது அல்ல; எப்போதுமே கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவுக்கான இடம் முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்தான். போன தேர்தலிலும் இப்படித்தான் வந்திருக்கும். கர்நாடகத்தில் வலிமையுள்ள கட்சிகள் என்றால் ஜனதா தளமும் காங்கிரஸூம்தாம். அதுவும் ஜனதா தளத்திற்கான அடித்தளம் இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசரநிலை காலத்தில் போடப்பட்டது. இந்திரா காந்தியின் அவசரநிலைக்காலக் கொடுமைகளை மக்கள் உணர்ந்தார்கள். அதனால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பெங்களூர் நகரின் பொதுத்துறை நிறுவனங்களின் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் எமர்ஜென்சி கால கெடுபிடிகளில் வாட்டிவதைக்கப்பட்டதை அனுபவபூர்வமாய் உணர்ந்தார்கள். பெங்களூர் ஜெயிலில் அடைத்துவைக்கப்பட்ட தேசத்தலைவர்களின் துயரங்கள் சிறையைத் தாண்டி அவ்வப்போது கசிந்துகொண்டிருந்தன.

தமிழ்நாட்டில் எமர்ஜென்சியைக் காப்பாற்றிக்கொண்டிருந்த அயோக்கிய ஊடகங்களும் எம்ஜிஆரைப் போன்று ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்த மக்களின் அமோக ஆதரவு பெற்ற அடிவருடித் தலைவர்களும் இங்கு இருக்கவில்லை. தேசம் பூராவும் நடைபெற்ற அட்டூழியங்கள்  உடனுக்குடன் மக்களிடம் பரப்பப்பட்டன. இந்திரா காந்திக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்ற கோபம் மக்களிடம் இருந்தது. அதனால் எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் இங்கே தோற்கடிக்கப்பட்டது. ஹெக்டே போன்ற மக்கள் தலைவர்கள் ஜனதா கட்சியின் மூலம் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக உலா வந்தார்கள். ஜனதா கட்சிக்கான அடித்தளம் மிக ஆழமாகவே போடப்பட்டது.

அதுவரை உதிரிக்கட்சிகளாக இருந்த பிரஜா சோஷலிஸ்ட், ஜனசங்கம் இன்னும் நிறையக் கட்சிகள் சேர்ந்து உருவான ஜனதா கட்சி மக்களிடம் மிக அதிகமான செல்வாக்கைப் பெற்றது. இளைஞர்களிடம் மிகப்பெரும் சக்தியாகவே வளர்ந்தது. ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, ஜே.எச்.பட்டேல், தேவே கௌடா போன்ற தலைவர்கள் மக்களிடம் புகழ்பெற்றவர்களாக வலம்வந்துகொண்டிருந்தனர். முதல்வராக வந்த ஹெக்டே கர்நாடகத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் புகழ் பெற ஆரம்பித்தார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவும் அவருடைய புகழை அதிகரிக்கவே செய்தது.

இந்த நிலையில் கட்சிக்குள்ளேயே குழு மனப்பான்மையை ஆரம்பித்தார் தேவே கௌடா. அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்றதும் அடுத்த முதல்வர் என்பது மக்கள் கண்ணோட்டத்தில் ஹெக்டே என்றிருக்க, தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜாதி அரசியலைத் தொடங்கினார் தேவேகௌடா. ஹெக்டே சுயமரியாதைப் பார்க்கிறவர் என்பதால் அவரைக் கட்சியை விட்டு வெளியேற்றுவது இந்தக் கூட்டத்திற்கு சுலபமானதாக இருந்தது. முதல்வர் தேர்வுக்காக ஹெக்டே வந்தபோது செருப்பால் அடிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளில் ஜனதா பிளவுபடுவது தவிர்க்கமுடியாமல் போயிற்று. ஹெக்டே காலத்திலேயே இரண்டாகப் பிளவுபட்ட ஜனதா அவருடைய மறைவுக்குப்பிறகு முழுக்க முழுக்க தேவேகௌடாவின் கைகளுக்கு முழுவதுமாகப் போய்விட்டது.

ஜனதா கட்சியிலிருந்து தனியே பிரிந்த ஜனசங்கம் பாரதிய ஜனதா என்ற பெயரில் தனியாக எடியூரப்பா தலைமையில் அதுபாட்டுக்கு ஒரு ஓரமாகச் செயல்பட்டுவந்தது. இதற்கிடையில் ஹெக்டேவை ஒழித்துக்கட்டிவிட்டு முதல்வராகப் பதவி வகித்த தேவேகௌடாவுக்கு அதிர்ஷ்ட தேவதை இரு கரங்களை அல்ல, இருநூறு கரங்களை விரித்துவந்து அவரை அப்படியே அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பிரதமர் பதவியில் உட்காரவைத்தது. பிரதமர் பதவியில் உட்கார்ந்துவிட்ட போதிலும் அவர் கர்நாடக முதலமைச்சர் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் என்றே பத்திரிகைகள் கார்ட்டூன் போட்டன. ஒரு மேயர் கூட கலந்துகொள்ள மறுக்கும் சாதாரண திறப்பு விழாக்களில் இந்தியாவின் பிரதமராக இருந்த தேவேகௌடா கலந்துகொண்டு திறந்துவைத்துக்கொண்டிருந்தார். “சார் எங்க தெருவுல குழாய் கனெக்ஷன் கொடுத்துட்டாங்க. திறப்பு விழாவுக்கு எப்ப வர்றீங்க”” என்ற கார்ட்டூன் ரொம்பவும் பிரபலம்.
தமிழகத்தில் ராமதாசைப் போலவே கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை முழுக்க முழுக்க சாதிக்கட்சியாகத்தான் நடத்துகிறார் தேவேகௌடா. தவிர இந்த மாநிலத்தில் எப்போதுமே அரசியலில் ஜாதிதான் பிரதானம். ஆனால் அது நீறுபூத்த நெருப்பாய்த்தான் இருக்கும். தேவேகௌடா குடும்பம் ஒக்கலிகா என்றால் இன்னொரு பெரிய எண்ணிக்கையில் உள்ள ஜாதி லிங்காயத்துகள். அதனைச் சேர்ந்தவர் எடியூரப்பா. அன்றையிலிருந்து பார்த்தோமானால் நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல், ஜே.எச்.பட்டேல் என்று லிங்காயத்துகளும், ஒக்கலிகரும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருவார்கள். இரண்டே இரண்டுமுறைதான் இந்தக் கணக்கு மாறியது. ஒருமுறை சஞ்சய் காந்தியின் புண்ணியத்தால் குண்டுராவ் என்ற பிராமணர் ஆட்சிக்கு வந்தார். அடுத்தமுறை மக்கள் எழுச்சி மற்றும் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஹெக்டே என்ற பிராமணர் முதல்வராக வந்தார். பங்காரப்பா போன்ற குருபர்கள் ஆட்சிக்கு வந்ததும் நடந்திருக்கிறது.(இந்தமுறை சித்தராமையா முதல்வராக வருவாரா பார்க்கவேண்டும். இவரும் குருபர்தான், மல்லிகார்ஜூன கார்கே பெயரும் அடிபடுகிறது. இவர் தற்சமயம் டெல்லி மந்திரியாக இருக்கிறார். தலித் என்பதனால் இவர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, சித்தராமையா தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவர். தனித்தன்மையுடன் இயங்கக் கூடியவர் என்பதனால் தங்களுக்கு ஒரு தலையாட்டி பொம்மையாக இருக்கமாட்டார் இவர் என்றும் டெல்லி தலைமை கருதக்கூடும்.)

அடுத்துவந்த தேர்தல் ஹெக்டே இல்லாமல் ஜனதா தளக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டபின்னர் வந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளத்திற்குத் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தது. அப்போதுதான் தேவேகௌடா அந்தக் காரியம் செய்தார். வலியப்போய் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி கண்டார். அதற்கு முன்பு பாரதிய ஜனதாவில் கட்சிமாறி புகழ் முன்னாள் முதல்வர் பங்காரப்பா போய்ச் சேர்ந்திருந்ததால் பாரதிய ஜனதாவின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்திருந்தது. ‘நீயும் நானும் சேர்ந்து ஆட்சி அமைப்போம். இருபது மாதங்கள் நான் ஆட்சி செய்கிறேன். அதற்கடுத்த இருபது மாதங்கள் நீ ஆட்சி செய்’ என்கிறமாதிரியான ஒப்பந்தம் பிஜேபிக்கும் ஜனதா தளத்திற்கும் இடையில் போடப்பட்டது.

தன்னுடைய மகனான எச்.டி.குமாரசாமியை முதல்வராக்கினார் தேவேகௌடா. எச்.டி. குமாரசாமியின் பதவிக்காலம் முடிந்ததும் முறைப்படி பாரதிய ஜனதாவுக்கு,  அதன் தலைவராக இருந்த எடியூரப்பாவுக்கு பதவியை விட்டுக்கொடுத்திருக்கத்தானே வேண்டும்? விட்டுத்தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணினார் குமாரசாமி. (விட்டுத்தந்து விடலாம் என்று குமாரசாமி சொல்லியபோதும் அவரை அப்படிச் செய்யவேண்டாம் என்றவர் தேவேகௌடாதான் என்றும் சொல்கிறார்கள்)

மக்கள் எச்.டி.குமாரசாமியின் மீது கோபம் கொண்டது இப்போதுதான். உண்மையில் குமாரசாமியின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது.  எத்தனை சிறப்புகள் இருந்தபோதும் சொன்ன சொல் தவறுவது நேர்மையோ நியாயமோ அல்ல என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.

இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டவர் எடியூரப்பா. தனக்கு ஒப்பந்தப்படி விட்டுத்தந்திருக்கவேண்டிய ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை இது குமாரசாமியும் ஜனதாதளம் கட்சியும் தனக்குச் செய்த துரோகம் என்பதாக அவர் சூறாவளிப் பிரச்சாரம் செய்தது மக்களிடம் மிக நன்றாகவே எடுபட்டது. பாரதிய ஜனதாவுக்கு ஜனதா தளம் விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதையும் தாண்டி, எடியூரப்பாவுக்கு குமாரசாமி விட்டுத்தந்திருக்கவேண்டும் என்பதாகவே மக்களிடம் அனுதாப அலை உருவானது. 

அந்த அனுதாப அலையை வைத்துக்கொண்டு தேர்தலை பாரதிய ஜனதாவின் கோணத்தில் இல்லாமல் வேறொரு புதிய கோணத்தில் சந்திக்க முடிவு எடுத்தார் எடியூரப்பா. இதற்கு அவருக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அத்தனைப் பணமும் சுரங்கத் தொழில் புரிந்துவந்த ரெட்டி சகோதரர்கள் மூலம் களமிறக்கப்பட்டது.

கோடிகள் கரை புரண்டு ஓடின.

இந்தக் கோடிகளைத் தாண்டி தேவைப்பட்ட இன்னும் பல கோடிகள் குஜராத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் மாதிரி மாநிலமாகவும் இருக்கும் குஜராத்திலிருந்து எப்படி அத்தனைக் கோடிகள் கரைபுரள முடியும்?

அந்த முதலமைச்சர்தான் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மைக்குப் பேர்போனவர் ஆயிற்றே! அங்கிருந்து எப்படி கோடிகள் வரமுடியும்?

தெரியவில்லை. ஆனால் வந்ததாகச் சொன்னார்கள்.

இந்தப் பணத்தில் என்ன நடந்தது தெரியுமா? கர்நாடகம் பூராவும் அங்கங்கே உள்ளூரில் இருந்த ஜனதா தளத்தைச் சேர்ந்த அத்தனைக் “குட்டித்தலைவர்களும்” தொண்டர்களும் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இவர்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு எல்லா ஊர்களிலும் தொண்டர்களும் குட்டித்தலைவர்களும் புதிதாகக் கிடைத்தார்கள். முக்கியமாக குடிசைப் பகுதிகளிலும் சேரிகளிலும் ஜனதா தளம் என்ற போர்டு ‘பாரதிய ஜனதா’ என்று மாற்றப்பட்டது. நெற்கதிர் சுமந்த பெண் மாற்றப்பட்டு தாமரைப்பூப்போட்ட கொடி ஏற்றப்பட்டது.

எதற்கென்றே தெரியாமல் காவி நிறம் தாழ்த்தப்பட்டவர்களின் பிற்படுத்தப்பட்டவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்தது.

பாரதிய ஜனதா கட்சி படித்தவர்களுக்கானது. பிராமணர்களுக்கானது. அறிவு சார்ந்தவர்கள்தான் அந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பார்கள். அந்தக் கட்சி இன்டலக்சுவல்களின் கட்சி. என்றிருந்த நிலைமை அடியோடு மாறிற்று.

படித்த தொண்டர்கள், கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்கள்தாம் பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடி பிடிப்பார்கள் அவர்கள்தாம் கட்சிக்குத் தேர்தல் வேலைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை தலைகீழாக மாறிப்போய் பாரதிய ஜனதாவுக்குத் தேர்தல் வேலைப்பார்த்தால் பிரியாணி, சாராயம், கையில் சுளையாக இருநூறு ரூபாய் முந்நூறு ரூபாய் என்று பணம் இறைக்கப்பட்டது.

ஜனதா தளத்திலிருந்து புதிதாக வந்த ஐம்பது சதவிகித தொண்டர்களின் துணையுடன் தேர்தலைச் சந்தித்த பாரதிய ஜனதா-

முட்டி மோதி ஆட்சியைப் பிடித்துவிட்டது!


ஓட்டளித்தவர்கள் அத்தனைப்பேரும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், வாழ்க்கையின் கடைநிலையைச் சேர்ந்தவர்கள்………………….. இவர்களுடைய ஓட்டுக்கள் மூலம்தான் பதவிக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவர் எடியூரப்பா ஒருவர்தான். மற்ற எல்லாத் தலைவர்களுமே பிஜேபி தன்னுடைய கொள்கையைக் கர்நாடகத்தில் வேரூன்றித்தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றே குருட்டுத்தனமாக நினைத்தனர்.

எடியூரப்பா பாரதிய ஜனதாவின் காவி நிறத்தைக் கூடுமானவரை ஒதுக்கிவைத்துத்தான் ஆட்சி புரிந்தார்.

ரெட்டி சகோதரர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மந்திரிசபை அமைப்பதிலிருந்து ஆட்சியின் தினசரி நடவடிக்கைகள் உட்பட தாங்கள் நினைத்தபடிதான் நடக்கவேண்டும் என்று ரெட்டி பிரதர்ஸ் நினைத்தனர்.

இதனை உடைக்கவேண்டும் , ரெட்டி சகோதரர்களிடமிருந்து ரிமோட் கண்ட்ரோலைப் பிடுங்கிவிட வேண்டும் என்று நினைத்தார் எடியூரப்பா.

அடுத்தது, கர்நாடக பாரதிய ஜனதா என்றாலேயே என்னதான் முதல்வர் எடியூரப்பா என்றாலும் பிராமணரான அனந்தகுமார்தான் இங்கே எல்லாம். அவர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வதைத்தான் டெல்லி கேட்கிறது. அவர் நினைத்தபடிதான் சின்னச்சின்ன அசைவும் நடக்கிறது.  இதிலிருந்து வெளிவர வேண்டும். அனந்தகுமாரின் மேலாதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்றும் முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பித்தார் எடியூரப்பா.

பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

பாரதிய ஜனதா தலைமைக்கும் எடியூரப்பாவுக்குமான நிழல் யுத்தங்கள் ஆரம்பமாயின. இவர் அவர்களை மாட்டிவிட, அவர்கள் இவரை மாட்டிவிட என்று அசிங்கமான அரசியல் நிகழ்வுகள் நாளும் நடைபெற ஆரம்பித்தன.

ஒவ்வொருவரும் ஊழல் புரிந்துதான் அரசியல் நடத்துகிறார்கள் என்பதால் இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவர் மாட்டிவிட சுலபமான ஆதாரங்கள் கிடைத்தன.

ரெட்டி சகோதரர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய எடியூரப்பாவின் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. ஈஸ்வரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். மற்ற மந்திரிகள் சட்டமன்றம் நடைபெறும்போதே ப்ளூபிலிம் பார்ப்பது, நர்ஸ் ஒருவருடன் அனிருத் ஆண்ட்ரியா வகையில் முத்தமிட்ட காட்சி லீக் ஆனது என்பதுபோல் பாரதிய ஜனதாவின் புகழைச் செம்மையாக வளர்த்தனர்.

இந்த லட்சணத்தில்தான் பிஜேபி ஆட்சி ஓடிக்கொண்டிருந்தது.

எடியூரப்பாவை விலக்கிவிட்டால் அவர் சும்மா அடங்கிவிடுவார் என்று பிஜேபி மேலிடம் தப்புக்கணக்குப் போட்டது.

எடியூரப்பாவைத் தவிர மக்களிடம் செல்லுபடியாகின்ற தலைவர்கள் பிஜேபியிடம் கிடையாது.
அனந்தகுமார் சாதி ரீதியாக மேலிடத்தின் செல்வாக்குப் பெற்றவர்.

ஈஸ்வரப்பா என்ற தலைவர் ஒருவர் இருக்கிறார். கர்நாடக பிஜேபியில் நேற்றுவரைக்கும் மாநிலத்தலைவராக இருந்தவர் இவர்தான். காடுவெட்டி குரு பேட்டி தந்தால் எப்படியிருக்குமோ அதைவிட மோசமான மொழிநடை இவருடையது. இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுத் தோல்வி அடைந்திருக்கிறார் ஈஸ்வரப்பா. கர்நாடக மக்களில் பெரும்பான்மையோர் மகிழ்ந்தும் சிலாகித்தும் கொண்டாடும் தோல்வி இவருடையதுதான்.

அடுத்த ஒன்றரை வருடத்தில் இரண்டு முதல்வர்கள் வந்தார்கள். உண்மையில் சதானந்த கௌடாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் பரிதாபத்துக்குரிய ஆத்மாக்கள்தாம். ஓ.பன்னீர்செல்வம் போன்று இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது முதல்வராகக் கொஞ்ச நாட்கள் இருந்தார்கள், அதிர்ஷ்டம் முடிந்தது வீட்டுக்குப் போய்விட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த அரசியல் சூழலில் மறுபடியும் ஒரு தேர்தல் வந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பதை சுலபமாகவே ஊகிக்கமுடியும்.

இந்த நிலையில் எடியூரப்பா புதுக்கட்சி ஆரம்பித்து ஜனதா தளத்திலிருந்து வந்து பிஜேபியில் சேர்ந்திருந்த அத்தனைப் பேரையும் மறுபடியும் தம்முடன் அழைத்துவந்துவிட்டார். ஆக பிஜேபி, தான்இருந்த தன்னுடைய பழைய இடத்திற்கு மீண்டும் போய்விட்டது.

இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கங்களால் பிஜேபி இன்னமும் அதிகமாகத் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருக்கவேண்டும். இன்னமும் பத்து சீட்டுக்களாவது அதிகம் பெற்றிருக்கவேண்டும். அது நடைபெறவில்லை.

பல மாவட்டங்களில் பிஜேபியின் கணக்குக்கு ஒரு சீட்டுக்கூட இல்லை. வெறும் சைபர்தான். குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நான்கு ஐந்து என்று வந்திருப்பதால் நாற்பது இடங்கள். அதிலும் பெங்களூர் நகரில் பன்னிரெண்டு இடங்கள் பிஜேபிக்குக்

கிடைத்திருக்கிறது. காரணம் தமிழர்களின் ஓட்டு.

தமிழர்கள் காங்கிரஸூக்குப் போடாமல் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டி எடுத்த முடிவு. வள்ளுவர் சிலைதிறப்பு போன்ற விவகாரங்களும் பிஜேபிக்கு சாதகமாய் எடுக்கப்பட்டன. வள்ளுவர் சிலை திறந்தது எடியூரப்பாதானே. அவருக்குத்தானே போயிருக்கவேண்டும் தமிழர்கள் ஓட்டு? என்ற கேள்வி வரலாம். பெங்களூரில் இருந்த கணிசமான தமிழ்க் கவுன்சிலர்களின் கட்டுக்கோப்பான செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றி இது. நிறைய தமிழ்க் கவுன்சிலர்கள் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்கள். இதுதான் இப்போதைய தேர்தல் முடிவின் கதை.

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் கர்நாடக அரசியலில் மறுபடியும் மாற்றங்கள் வரலாம். எடியூரப்பாவை டெல்லி மேலிடம் மறுபடி ‘தாய்க்கட்சிக்கு’ வரச்சொல்லி அழைப்பு விடுக்கலாம். எடியூரப்பாவும் மூட்டை முடிச்சுக்களுடன் கேஜேபியை மூடிவிட்டு பிஜேபியுடன் போய்ச்சேரலாம்.


அப்படிப்போய்ச் சேர்ந்தாலும் மறுபடியும் சட்டமன்றத் தேர்தல் வரும்போது பாரதிய ஜனதாவுக்கு ஐம்பது இடங்கள் கிடைக்கலாம். குமாரசாமி பரந்த கண்ணோட்டத்துடன் சாமர்த்திய அரசியல் நடத்தினாரென்றால் ஆட்சி செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம்.